இதையெல்லாம் பார்க்கிற போது, கேட்கிற போது மனித நேயம் மிக்கவர்களின் இதயத்தில் எரிமலை வெடிக்க வேண்டாமா? உனக்கு அப்படி வெடிக்கவில்லையா? உன் இதயம் துடிக்கவில்லையா? வேறு வழியில்லையே, என்கிறாயா தம்பி? தேர்தல் அரசியலுக்கு வழிகாட்டிய அண்ணா வழி இந்த நேரத்தில் பயன்படாது என்ற நிலை வரும் போது பெரியார் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது தானே உன்னைப் போன்ற இலட்சியவாதிக்கு அழகு! வழி முக்கியம் அல்ல! வெற்றிதான் முக்கியம் -இது வடவர் கொள்கை. வெற்றி முக்கியம் அல்ல! வழிதான் முக்கியம் - இது தமிழர் கொள்கை.
நான் இன்னும் ஒன்றை உன்னைப் பார்த்துக் கேட்கிறேன். இந்திய நாடாளுமன்றத்தில் உனக்கு என்ன வேலை தம்பி? பிரிட்டிஷ் நாடாளுமன்றமாவது நம் தமிழினத்துக்குத் துணை நிற்கும். பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனாவது தமிழினத்துக்காக மனமிரங்குவார். மன்மோகனுக்கே மனிதநேயம் இல்லாமல் போன பின்னாலே ஒரு பாவமும் அறியாத மக்களுக்கு மரண ஓலை எழுதிய மோடிக்கா இருக்கப் போகிறது?
கூப்பிடு தூரத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலைக்கு ‘கலியுக அர்ச்சுனன்' கண்டனம் தெரிவித்தாரா? இரண்டு சொட்டு கண்ணீர் சிந்தினாரா? சுஷ்மா சுவராஜ் கொழும்புக்குப் பறந்து போய் சிங்கள ஹிட்லர் கொடுத்த விருந்திலே கலந்து கொண்டு அவனை வியந்து பாராட்டி வாழ்த்துக் கூறிவிட்டு வந்தாரே! இதிலிருந்து மோடியை நீ வேறுபடுத்திப் பார்க்கிறாயா?
தம்பி! ஒருக்கால், நீ இந்தக் கூட்டணியில் இடம் பெற்று வெற்றி பெற்றாலும் பெறலாம். ஆனால் உன் இலட்சியம், உன் கொள்கை அந்த வெற்றியால் படுதோல்வியைச் சந்திக்கும் என்பதை மறந்து விடாதே! பதவியும் பணமும் கொள்கை கோட்பாடுகளைக் கொன்றொழிக்கும் கொலைக்கருவிகள்'' இதுதான் நான் படித்த தத்துவம்.
தம்பி! இதை, நான் உனக்கு சொல்லாமல் வேறு யாருக்குச் சொல்வேன்? இதை, நான் உனக்குச் சொல்லாமல் வேறு யார் உனக்குச் சொல்வார்கள்? என் உயவு நோயை - மன உளைச்சலை உனக்குத் தெரிவிக்கிறேன். அது என் நீங்காத கடமை. இதை நீ எப்படி எடுத்துக் கொண்டாலும் அது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.
நான் ஒரு பத்திரிகையின் கடைசிப் பக்க அட்டைப் படத்தைப் பார்த்தேன். உன் கட்சித் தோழர்கள் உருவகப்படுத்தி வரைந்த ஓவியத்தையும் பார்த்தேன். பாவம், அவர்களுக்கு தெரியாது தம்பி; நீ ஈரோட்டுத் தேரை இந்து ராஷ்ட்ராவை ஏற்றி வருவதற்காக குஜராத்திற்குப் போகிறாயா தம்பி? நீ ஏற்றி வரப்போகிறவர் தர்மத்தைச் சூது கவ்வும் என்று சொன்ன அர்ச்சுனனும் அல்ல! நீ கண்ணனும் அல்ல! துரியோதனனுக்கு தேரோட்டப் போகும் கர்ணன் நீ! நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன்; உன் விருப்பம் போல் செய் தம்பி!