You are not connected. Please login or register

Post-#111/7/2014, 5:52 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நான் பார்த்த, அந்த இரண்டு நிகழ்ச்சிகள்தாம், இக்கட்டுரைத் தொடரை எழுத வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் உருவாக்கின.

ஆறேழு மாதங்களுக்கு முன்பாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா, நானா' நிகழ்ச்சியில், நண்பர் கோபி, இளைஞர்களைப் பார்த்து ஒரு வினாவை முன்வைக்கின்றார். "நீங்கள் அறிந்த வாழும் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிலரின் பெயர்களைச் சொல்லுங்கள்". சில நொடிகள் அமைதியாய்க் கழிகின்றன.

எவரிடமிருந்தும் எந்த விடையும் வரவில்லை. "ஒரு எழுத்தாளர் பெயர் கூடவா, உங்கள் நினைவுக்கு வரவில்லை?" என்று திருப்பிக் கேட்டவுடன், ஓர் இளைஞர் கை உயர்த்துகின்றார். ஒலிவாங்கியைக் கையில் வாங்கி, "எழுத்தாளர் மு.வ." என்கிறார்.
அந்த அரங்கில் வேறு எந்த விடையும் வரவில்லை. மு.வ.வின் பெயரைக் குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சிதான் என்றாலும், அவரும் ‘வாழும் எழுத்தாளர்' இல்லை. எனவே வெளிவந்த ஒரு விடையும் சரியானதாக இல்லை. அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற, இளம்வயது ஆண்கள், பெண்கள் எவருக்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரைக் கூடத் தெரியவில்லையா, அல்லது அந்த நிமிடத்தில் சட்டென்று தோன்றவில்லையா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.

மு.வ.வின் பெயரைக் குறிப்பிட்ட அந்த இளைஞரை நோக்கி, "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?" என்று கோபி கேட்க, "நான் எம்.ஏ., தமிழ் படிக்கின்றேன்" என்றார் அவர். உண்மையாகவே நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
தமிழ் எழுத்துகளிலிருந்து, இன்றைய இளைய தலைமுறை எவ்வளவு விலகி நிற்கிறது என்பதை அந்நிகழ்ச்சி உணர்த்தியது.

மிக அண்மையில், இன்னொரு அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பெரிய அளவிலான ஒரு படத்தை, ஒரு கல்லூரி வாயிலில் நின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களிடம் காட்டி, "இவர் யார் என்று தெரியுமா?" என்று கேட்கப்படுகின்றது. ஒவ்வொருவராக அந்தப் படத்தைப் பார்க்கின்றனர். சிரிக்கின்றனர். விடை சொல்ல வெட்கப்படுகின்றனர்.

"சார்லி சாப்ளின் மாதிரியே மீசை வச்சிருக்காரு. ஆனா அவரு இல்லே. வேறு யாருன்னும் தெரியலே" என்கிறார் ஒரு மாணவர்.

"எங்க தாத்தா மாதிரியே இருக்காரு" என்று ஒரு மாணவி சொல்ல, எல்லோரும் சிரிக்கின்றனர். வேறு விடைகள் வருமா என்று தொகுப்பாளர் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டே வருகின்றார். ஒரு மாணவர் சட்டென்று முன்வந்து, "எனக்குத் தெரியும், இது முத்துராமலிங்கத் தேவரின் படம்" என்கிறார். அவருக்கு முத்துராமலிங்கத் தேவரையும் தெரியவில்லை என்பது புரிந்தது.

Post-#211/7/2014, 5:56 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்



என்ன ஆயிற்று நம் இளைஞர்களுக்கு? இலக்கியத்தை விட்டும், எழுத்துலகை விட்டும் வெகுதூரம் விலகிப் போய்விட்டார்களா? தங்கள் துறைசார்ந்த படிப்பும், தொழில் அனுபவமும் மட்டுமே போதுமானவை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களா? குழப்பமாக இருந்தது.

அதே வேளையில், இன்றைய இளைஞர்களின் கணிப்பொறி அறிவு, தொழில்நுட்ப அறிவு ஆகியன நம்மை வியக்க வைக்கின்றன. அதனால்தான் நம் தமிழ்ப் பிள்ளைகளை, உலகின் பல நாடுகள் வாரி அணைத்துக் கொள்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், நம் பிள்ளைகள் இன்று காலூன்றி நிற்கின்றனர். அவர்களால்தான், இணையத்தள உலகில், தமிழுக்கு இன்று ஒரு தனியிடம் கிடைத்துள்ளது. "தம்மின் தம் மக்கள் அறிவுடைமை" நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

இவ்வாறாக நம் இளைய தலைமுறையினர், சிலவற்றை நன்கு அறிந்தும், சிலவற்றைப் பற்றிச் சிறிதும் அறியாமலும் இருப்பது ஏன்? இந்த நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?

ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு ‘பொதுப்புத்தி' உண்டு. அப்படிப்பட்ட பொதுவான சிந்தனை, தானாக உருவாவதில்லை. ஒரே நாளில் உருவாக்கப்பட்டு விடுவதுமில்லை. சிறிது சிறிதாகச் சமூகத்தின் மூளையில் ஏறுகின்றது. சில வேளைகளில் திட்டமிட்டு ஏற்றவும் படுகின்றது.

அவ்வாறு தமிழ்ச் சமூகத்தின் மூளையில், பரவலாகச் சில புரிதல்கள் படிந்து கிடக்கின்றன. இந்தியச் சமூகத்தின் நிலையும் கூட அதுதான் என்றாலும், நாம் நம் தமிழ்ச் சமூகம் குறித்தே இங்கு பேசுவோம்.

மூன்று துறைகளைப் பற்றிய மூன்று விதமான செய்திகள், நம் பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கின்றன.

Post-#311/7/2014, 5:58 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


1. இலக்கியம் பயனற்றது. வேறு எந்தத் துறையிலும் இடம் கிடைக்காதவன்தான், இலக்கியம் படிப்பான்.

2. அரசியல், கயமைத்தனம் நிறைந்தது. அதில் ஈடுபட்டுள்ள அனைவரும், அல்லது மிகப் பெரும்பான்மையினர் அயோக்கியர்கள்.

3. கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்குரியது. படித்தால்தான் வேலை கிடைக்கும், பணம் சேர்க்க முடியும். தான் முன்னேறுவதும், தன் குடும்பத்தை முன்னேற்றுவதும்தான் நல்ல குடிமகனின் அடையாளங்கள்.

மேலே குறிப்பிடப்பெற்றுள்ள மூன்று கருத்துகளும், இன்றைய இளைஞர்கள் பலரின் நெஞ்சங்களில் படிந்து கிடப்பது உண்மை. இவற்றை நான் கற்பனையாக எழுதவில்லை. இந்தக் கருத்துகளே, இன்றைய இளைஞர்களை வடிக்கின்றன. அதனால்தான், வாழும் தமிழ் எழுத்தாளர்களோ, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனோ அவர்களால் அறியப்படாதவர்களாக உள்ளனர் & தங்கள் துறை சார்ந்த அறிவில் மட்டும், நம் இளைஞர்கள் வல்லுனர்களாக உள்ளனர்.

1970களின் தொடக்கத்தில் உருவேற்றப்பட்ட இந்த எண்ணங்கள், ஓர் அரை நூற்றாண்டு கால அளவில் வலிமை பெற்று, இறுகி, இன்றைய இளைஞர்களின் மூளைகளில் இடம் பிடித்துக் கொண்டுவிட்டன.

‘1970களில்' என்று நான் குறிப்பிடுவதற்கு மிக நியாயமான காரணங்கள் உள்ளன. அது பற்றிய விரிவான செய்திகளை, இத்தொடரில் நாம் காண இருக்கிறோம்.

எப்படியோ, ஒரு தலைமுறை இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற இடைவெளி, நம் சமூகத்திற்கு மட்டும் உரியதன்று. இது எல்லாக் காலத்திற்கும் பொருந்தும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். எனினும், இந்த இடைவெளியைக் குறைத்து, இரண்டு தலைமுறைகளும் இணைந்து நடத்துகின்ற உரையாடல், சில புதிய பாதைகளைத் திறக்கும். தலைமுறை இடைவெளியைப் பற்றியே எண்ணிக் கொண்டிராமல், தலைமுறைச் சந்திப்பைப் பற்றித் திட்டமிடுகின்ற சமூகங்களே, தன் அடுத்த கட்ட நகர்வைத் தொடக்கும்.

முதியவர்களின் பட்டறிவும், இளையவர்களின் செயல்திறனும், இணையும் புள்ளிகளில் அதிசயம் பிறக்கும். புதிய பரிமாற்றங்கள் நிகழும். சில கற்பிதங்கள் உடைந்து நொறுங்கும்.

இளையவர்கள் மட்டுமில்லை, முதியவர்களும் அறிந்தவை சில, அறியாதவை பல! அறிந்தும் அறியாமலும்தான் அனைவரின் வாழ்வும் பயணப்படுகின்றது!

Post-#411/7/2014, 6:01 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


முற்றும் அறிதல் என்பது என்றைக்கும் முடியாத ஒன்று! என்றாலும், கூடுதல் அறிவை நோக்கியே நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடப்பது சிங்கத்தின் குணம் என்பார்கள். நமக்கும் அது தேவைப்படுகின்றது. என் ‘நேற்றுகளை' நான் எண்ணிப் பார்க்கிறேன். 60, 70களில், நான் என் இளமைக் காலத்தில் வாழ்ந்தேன். அன்றைய சமூகச் சூழல், இளைஞர்களிடமிருந்த இலக்கிய, அரசியல் ஈடுபாடு போன்றவைகளை, இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது!

"என்ன இருந்தாலும் எங்கள் காலம் போல வராது" என்று அங்கலாய்ப்பதோ, ஆதங்கப்படுவதோ என் நோக்கமில்லை. நம் பிள்ளைகளுக்குப் பயனுடைய நேற்றுகளை எடுத்துச் சொல்வதும், அவர்களிடமிருந்து தேவையான நாளைகளைக் கற்றுக் கொள்வதும் மட்டுமே நோக்கம்!

வாருங்கள் இளைஞர்களே, உரையாடத் தொடங்குவோம்!

(வியாழன்தோறும் சந்திப்போம்)

(தொடர்புகளுக்கு : subavee11@gmail.com, www.subavee.com


சுப.வீரபாண்டியன்- சிறு குறிப்பு:

பேராசிரியர் சுபவீ எனும் சுப வீரபாண்டியன், திராவிட இயக்கத்தின் தலை சிறந்த பேச்சாளர். பேச்சின் சிறப்பு எழுத்திலும் கைவரப்பெற்றவர்.

கால் நூற்றாண்டுக்கும் மேலான அரசியல் அனுபவம், தமிழ் சமூகத்தை விழிப்படைய வைக்க ஓயாமல் எழுதியும் பேசியும் வரும் பெரும்பணி...

பேராசிரியர் பணி ஒரு பக்கம்... சமூகப் பணி மறுபக்கம்... இரண்டிலுமே செம்மை சேர்த்த பேரறிவாளர் இவர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர் சுபவீ.

சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர்.

பெரியார், அம்பேத்கர் பற்றாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர்.

சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர்.

2007ம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்று வரை அவ்வமைப்பின் பொதுச் செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர்.

இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். வாழ்விணையரின் பெயர் வசந்தா.

Post-#511/7/2014, 6:02 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


(ஒரு முன்குறிப்பு: இத்தொடரின் தொடக்கத்தைப் பாராட்டி, இணையத்தளத்திலும், முகநூல் மற்றும் என் மின்னஞ்சல் வழியும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ள அனைவருக்கும் நன்றி. ஆக்கப்பூர்வமான திறனாய்வுகளுக்கும் மிக்க நன்றி. எனினும் ஒரு சில பதிவுகள், வழக்கம்போல், "சுபவீ, கருணாநிதியின் ஜால்ரா, அல்லக்கை" என்பன போன்ற வசைபாடல்களாக வந்துள்ளன. அப்படியே நான் ஜால்ராவாக இருந்தாலும், அதற்கும், இக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு? அவர்கள் ஆட்டத்தைப் பார்க்காமல், ஆளை ஆளைப் பார்க்கிறார்கள். ஒரு முன்முடிவோடு உள்ள அவர்கள் குறித்து நாம் கவலைப்பட முடியாது. நம் பணியைத் தொடர்வோம்.)

அண்மைக்காலமாக, இளைஞர்களைச் சந்திக்கும் போதெல்லாம், அவர்களின் சட்டைப் பையில், பேனா இருக்கிறதா என்று கவனிக்கிறேன். பலருடைய சட்டைப் பையிலும் பேனா இல்லை. சிலருடைய சட்டைகளில் பையே இல்லை.

இரண்டு விரல்களால் எழுதும் பழக்கம் குறைந்து, பத்து விரல்களால், கணிப்பொறியில் தட்டச்சு செய்யும் பழக்கம் கூடி வருவதன் விளைவாகவே, பேனாவின் தேவை சுருங்கி வருகின்றது. கையொப்பம் இடுவதற்கு மட்டுமே பேனா தேவையானதாக உள்ளது. அறிவியல் வளர்ச்சியில் இதுவும் ஒன்று. இப்போதும் எழுத்து இருக்கின்றது. ஆனால் எழுதும் முறை மாறிவிட்டது.

எழுதுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன. நான் ஐந்தாண்டு காலம் தட்டச்சராகப் பணியாற்றியவன். சில வேளைகளில் பத்துப் பக்கங்கள் தட்டச்சு செய்து முடித்த பின்னும், நான் தட்டச்சு செய்த கட்டுரையின் உள்ளடக்கம் என்ன என்பது என் மூளையில் ஏறியிருக்காது. எழுத்துப் பிழை வராமல் தட்டச்சு செய்வதில் மட்டுமே கூடுதல் கவனமிருக்கும். சுருக்கமாகச் சொன்னால், ஓர் இயந்திரத்தின் முன் இன்னொரு இயந்திரமாக மட்டுமே அமர்ந்து தட்டச்சு செய்த நிலை அது!

ஆனால் ஒரு நாளும் அப்படி இயந்திரத்தனமாக நம்மால் எழுத முடியாது. மனம், பொருளோடு ஒன்றினால் மட்டுமே எந்த ஒன்றையும் நம்மால் எழுத முடியும்.

எழுதுதல் என்றால் கதை, கவிதை போன்ற இலக்கியங்களை எழுதுவது என்று கொள்ளத் தேவையில்லை. கடிதங்கள் கூட நம்மால் இன்று எழுதப்படுவதில்லை. "எதற்காக இனிமேல் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்க வேண்டும்? மின்னஞ்சல், குறுஞ்செய்தி (SMS) எல்லாம் வந்த பிறகு, ஏன் நேரத்தைச் செலவழித்துக் கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்? உங்கள் காலத்திற்கு எங்களையும் திரும்பச் சொல்கின்றீர்களா?" என்று இளைஞர்கள் சிலர் கேட்கின்றனர்.

இல்லை, பழைமையை நோக்கித் திரும்ப வேண்டும் என நான் கூறவில்லை. எனினும், இன்றையத் தகவல் பரிமாற்றத்திற்கும், அன்றைய கடிதங்களுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. எல்லா நேரங்களிலும் நாம் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்க முடியாது என்பதும், சுருக்கமாகத் தகவல்களை அனுப்பினால் போதும் என்பதும் சரிதான். ஆனால், கடிதங்களில்தான், தகவல்களைத் தாண்டி, நாம் நம் உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். தகவல் தெரிவிப்பது (Communication) என்பது வேறு, உணர்வுகளின் வெளிப்பாடு (Expression)என்பது வேறுதானே!

இரண்டாவது நிலைக்குக் கடிதங்கள்தான் உதவும். எழுதிப் பார்க்கும் போதுதான் இந்த உண்மையை உணர முடியும்!

Post-#611/7/2014, 6:05 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


எழுத்தும், எழுதும் பழக்கமும் நம் நினைவாற்றலை வளர்க்கும் ஆற்றலுடையன. ஒரு முறை ஒன்றை எழுதுவது, மூன்று முறை படிப்பதற்குச் சமம் என்பார்கள். அந்த உண்மை குறித்து இன்று எவரும் கவலை கொள்ளவில்லை. காரணம், எதையும் மனப்பாடம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்ற கருத்து இன்று வலுப்பெற்றுள்ளது.

அன்று கணக்கு வகுப்பில், வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தோம். இன்றோ, அது தேவையில்லை என்று கருதுகின்றோம். கணக்குக் கருவி (Calculator) வந்துவிட்ட பின், வாய்ப்பாடு எதற்கு என்ற கேள்வி மேலெழுகின்றது. ஒரு பொருளின் விலை 13 ரூபாய், ஏழு பொருள்கள் என்ன விலை என்று கேட்டால், உடனே நம் சிறுவர்கள் அந்தக் கணக்குக் கருவியைத் தேடுகின்றனர்.

உடற்பயிற்சியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அன்றாடம் நடைப்பயிற்சி செய்பவர்களைக் காண முடிகிறது. ஆனால் மனப்பயிற்சி பலவற்றை நாம் கைவிட்டுவிட்டோம். மனப்பயிற்சியின் தேவை உணரப்படாமலே உள்ளது.
மனத்தை ஒரு நிலைப்படுத்துதல், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுதல், சிக்கல்களுக்கேற்ற முடிவுகளை உடன் எடுத்தல் போன்றவை எல்லாம் மனப்பயிற்சியினால் மட்டுமே வாய்க்கும். அதற்குரிய சின்னச் சின்னப் பயிற்சிகளை எல்லாம் விட்டுவிட்டு, யோகா வகுப்பு, சூழ்நிலைத் தியானம் என்று நம்மில் பலர் புறப்பட்டுள்ளோம். யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் நல்லவைதான். ஆனால் இன்று அவை குழும நிறுவனங்களாகவும் (Corporate companies)வணிக மையங்களாகவும் மாறிக் கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும்.

நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய சொத்துகளில் ஒன்றான ‘திருக்குறள்' போன்ற வாழ்வியல் நூல்களை நாம் படிப்பதில்லை. அவையெல்லாம், பயனற்றவை என்று கருதுகின்றோம். ஆனால் ‘வாழும் கலை' (Art of living)அறிய, சாமியார்களின் பின்னால் அலைகின்றோம். இதற்காக ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்கும் பெரிய நிறுவனங்களை நம்புகிறோம்.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு"

என்று திருக்குறள் கூறும், ஆழ்ந்த, அரிய உளவியல் செய்தியை உளம்கொள மறுக்கின்றோம். அதனையே, நூறாயிரம் கோடிச் சொத்துகளுக்கு அதிபர்களாக உள்ள சாமியார்கள், ஆங்கிலம் கலந்த தமிழில் சொன்னால் நம்புகின்றோம்.
குறிப்பாக, தொழில் அதிபர்கள், செல்வர்கள் மற்றும் கணிப்பொறித் துறை இளைஞர்கள்தாம் ‘மன அமைதி' பெறுவதற்காகச் சாமியார்களையும், உளவியல் வல்லுனர்களையும் நாடிச் செல்கின்றனர்.

Post-#711/7/2014, 6:07 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


மன அமைதியை அவர்கள் எப்படி, எப்போது இழந்தார்கள்? நிறையப் பணம் ஈட்ட முடிகிறதே, பிறகு ஏன் அமைதி இல்லை?

கோவை, நீலகிரிப் பகுதிக்குச் சென்றால், மலைகளில் மிகப் பெரிய தேயிலை நிறுவனங்கள். கோடிக் கணக்கில் பணம் புரட்டும் தொழில் அதிபர்கள். மலை அடிவாரங்களில், அமைதியான சூழ்நிலையில் பல ஆசிரமங்கள். பரப்பரப்பான தொழிலதிபர்கள் வாழும் இடத்திற்கு அருகிலேயே, அமைதியான ஆசிரமங்கள் ஏன் உருவாக்கப்படுகின்றன?

குன்றுகள் தோறும் கோடீசுவரர்கள், சறுக்கி விழுந்தால் சாமியார்கள் என்னும் நிலை ஏன் ஏற்படுகின்றது?

அன்றாடம் கஞ்சிக்கே வழியின்றி, கடுமையான உடல் உழைப்புக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டு, பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வாழும் கூலித் தொழிலாளர்கள் நிறைந்துள்ள வடசென்னை போன்ற பகுதிகளில், ஏன் எந்த ஆசிரமும் காணப்படவில்லை? அவர்கள் ஏன், வாழும் கலை அறிய, எந்தச் சாமியாரையும் அணுகவில்லை?

இவை எல்லாவற்றிற்குமான விடை, நம் வாழ்க்கை முறையில் உள்ளது. நம்முடைய வளர்ப்பு முறையிலும் உள்ளது. இன்றையத் தொழில் முறை அமைப்பிலும் உள்ளது.

எழுத்து வேண்டாம், இலக்கியம் வேண்டாம், ஓய்வு வேண்டாம், உறவுகள் வேண்டாம்... எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பணம், பணம், பணம் என்ற ஒன்றை நோக்கியே ஓடிய ஓட்டத்தில்தான் நாம் வாழ்வின் உண்மையான பொருளை இழந்தோம்.

இவ்வாறு எழுதுவதன் மூலம், பணமே தேவையில்லை என்னும் வறட்டுச் சிந்தனையை நான் விதைக்கவில்லை. ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்னும் உண்மையை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். ஆனால், பணம் தேடும் பணி ஒன்றே வாழ்க்கையாகிவிடாது என்பதை வலியுறுத்த வேண்டிய இடத்தில் இன்று நாம் உள்ளோம்.

மனிதர்களுக்குப் பணம், உழைப்பு, ஓய்வு, சமூக அக்கறை அனைத்தும் தேவையாக உள்ளன. எட்டு மணி நேர உழைப்பு, எட்டுமணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்னும் சித்தாந்தத்தைத் தொலைத்துவிட்டு, ‘மே நாள்' கொண்டாடுவதில் என்ன பொருள் இருக்க முடியும்?

இன்றையப் பன்னாட்டுக் கணிப்பொறி நிறுவனங்களில் எட்டு மணி நேர வேலை என்பது எங்கேனும் உறுதி செய்யப்பட்டுள்ளதா? அதனைக் கோருவதற்கு அவர்கள் சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளதா?

மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, மாமல்லபுரத்திற்கோ, பாண்டிச்சேரிக்கோ, மலை சூழ்ந்த பகுதிக்கோ அழைத்துச் சென்று, ஆடவும், பாடவும் வழிசெய்து கொடுப்பதன் மூலம், அவர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்திவிட முடியுமா?

இன்று தங்களிடம் வருவோரில், மிகப் பெரும்பான்மையினர், நல்ல ஊதியம் வாங்குகின்ற, கணிப்பொறித் துறையில் பணியாற்றும் இளைஞர்கள்தாம் என்று உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனரே, ஏன் இந்த நிலை?
தொடர்ந்து பேசுவோம்!

(வியாழன்தோறும் சந்திப்போம்)

Post-#811/7/2014, 6:08 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


"ஏன் எங்களையே (IT பிரிவினர் ) எப்போதும் குறிவைத்துத் தாக்குகின்றீர்கள்? எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் எழுதுகின்றார்களா?" என்று கேட்டுச் சில மடல்கள் வந்துள்ளன.

"உங்கள் தலைமுறை 40 ஆண்டுகளில் ஈட்ட முடியாத தொகையை, நான்கைந்து ஆண்டுகளில் கணிப்பொறித்துறையில் உள்ள நாங்கள் ஈட்டி விடுகிறோம் என்னும் பொறாமையில் நீங்கள் எல்லோரும் புழுங்குகின்றீர்கள்" எனச் சிலர் குற்றம் சாற்றியுள்ளனர்.

"எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்னும் உங்களின் கோட்பாடு, மருத்துவர்களுக்குப் பொருந்துமா, தீயணைப்புத் துறை ஊழியர்களுக்குப் பொருந்துமா?" என்னும் விவாதங்களும் எழுந்துள்ளன.

எப்படியோ, தங்கள் நேரத்தைச் செலவழித்து, என்னோடும், நம்மோடும் உரையாட முன் வந்துள்ள இளைஞர்களுக்கு முதலில் என் நன்றி!

நாகரிகக் குறைவான சொற்களால் எழுதப்பெற்றுள்ள சில கடிதங்களையும் கருத்துகளையும் புறக்கணித்துவிட்டு, மேற்காணும் கருத்துகளுக்கு விடையளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரையும் குறி வைத்துத் தாக்குவது நம் நோக்கமில்லை என்றாலும், சென்ற என் கட்டுரையில், கணிப்பொறித் துறை இளைஞர்கள் மீதும், அத்துறையின் இன்றைய நிலை மீதும் சில விமர்சனங்கள் வெளிப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் கொண்ட சினத்திலும் நியாயம் உள்ளது.

கணிப்பொறித்துறையில் உள்ள இளைஞர்கள் மட்டுமில்லை, அத்துறையினால் நம் நாடும், பெரும் வருமானத்தை ஈட்டுகின்றது என்பதை நாம் அறிவோம். ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அத்துறையினால் இந்தியா வருமானம் பெறுகின்றது என்று கூறுகின்றனர். நாடும், நம் பிள்ளைகளும் பெறும் வருமானம் கண்டு நாம் பொறாமைப் படுவோமா? சொந்தப் பிள்ளைகளின் மீது பொறாமை கொள்ளும் பெற்றோர்கள் உலகில் எங்கும் இருக்க முடியாது.

எனினும் இன்றைய நிலை குறித்து நமக்குள்ள இரண்டு கருத்தோட்டங்களை மறைக்க வேண்டியதில்லை.

Post-#911/7/2014, 6:09 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


ஒன்று, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரே நாட்டில், ஒரே சமூகத்தில் வாழும் ஒத்த வயதுடைய இளைஞர்களிடையே, பாரதூரமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது விரும்பத்தக்கதன்று. பிற துறைகளில் பணியாற்றும் இளைஞர்களின் பொருளாதார நிலையையும் உயர்த்திட அரசுகள் திட்டமிட வேண்டும். உடனடியாகச் ‘சமத்துவ சமுதாயத்தை' அமைத்துவிட வேண்டும் என்பது இதன் பொருளன்று. மிகப்பெரிய ‘வர்க்க வேறுபாடுகள்' ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

இரண்டாவது, நாட்டின் முன்னேற்றம் பற்றியது. ஒரு நாட்டின் முன்னேற்றத்தில், பொருளாதாரத்தின் பங்கு மிக இன்றியமையாதது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அம் முன்னேற்றம், சமூகப் பண்பாட்டு முன்னேற்றத்தோடு பின்னிப் பிணைந்ததாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான முன்னேற்றமாக இருக்கும்.
அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசம், தன் அரசியல் விடுதலைக்காகப் போராடுவது நியாயமானதும், இயற்கையானதும் ஆகும். ஆனால் அவ்வரசியல் விடுதலை பண்பாட்டு விடுதலையை நோக்கி நகர்வதற்கான முதல்படி என்னும் புரிதல், மிகச் தேவையான ஒன்றில்லையா?

பண்பாட்டிலேயே மிக உயர்ந்தது சமத்துவப் பண்பாடுதானே? சமத்துவத்திற்கு எதிரான வர்க்கம், சாதி உள்ளிட்ட பல கூறுகறை எதிர்த்துப் போராடுவதில் ஓர் ஒருங்கிணைவு நம்மிடம் ஏற்பட வேண்டாமா?

காலப்போக்கில் பல புதிய விழிப்புணர்வுகளும், சில போர்க்குணங்களும் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளன என்பதை யார்தான் மறுக்க முடியும்? ஆனால் அந்த விழிப்புணர்வு, சமத்துவம் மற்றும் சமூகநீதியை மையமாகக் கொண்டிருக்கவில்லையே என்பது நம் ஆதங்கம்.

பொருளியல் துறையில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ஜோன் டிரீஸ் ((Amartya sen & Jean Dreeze)) இருவரும் இணைந்து எழுதியுள்ள ‘‘An Uncertain Glory''(First Edition 2013) என்னும் நூல் தரும் செய்திகள் சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம்.

"2012 டிசம்பரில், ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி, டெல்லியில், பாலியல் வன்முறைக்கு உள்ளான போது, பொதுமக்கள் கிளர்ந்து எழுந்தனர். இந்தியாவில் அரசியல் சிக்கலாகவே அது உருப்பெற்றது. மக்களின் இந்த அறச்சினம் (KAPP) வரவேற்கத்தக்க முன்னேற்றமாக இருந்தது. பாதிக்கப்பட்ட மாணவியை, நடுத்தட்டு மக்கள் தங்களில் ஒருவராக மிக எளிதில் அடையாளப்படுத்திக் கொண்டனர். அதனால் அது பெரும் போராட்டமாக உருப்பெற்றது.

ஆனால் இதனைப் போன்ற காட்டுவிலங்காண்டித் தனங்கள், பொருளாதாரத்திலும், சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட தலித் பெண்களின் மீது காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவுமில்லை. பொதுமக்களின் கோபத்தைக் கிளறவும் இல்லை.."

-இவ்வாறு அந்த நூலாசிரியர்கள் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள வரிகளை அப்படியே சொல்லுக்குச் சொல் நான் மொழி பெயர்க்கவில்லை என்றாலும், அவர்களின் கருத்தைச் சிறிதும் மாற்றாமல் மேலே தந்துள்ளேன். அவர்களின் கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

Post-#1011/7/2014, 6:11 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


தனிப்பட்ட மனிதர்களின் பாலியல் வன்முறைகள், வரம்பு மீறல்கள் ஆகியனவற்றைத் தாண்டி, வடநாட்டில் ‘காப்' (KAPP) பஞ்சாயத்துகளும், தென்னாட்டில் ‘சாதிப்' பஞ்சாயத்துகளும் எத்தனை கொடூரமான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. பெண்களை - குறிப்பாகத் தலித் பெண்களை - அடிப்பதும், உதைப்பதும், பொது இடத்தில் நிர்வாணப் படுத்துவதும், ‘கௌரவக் கொலை' செய்வதும் இன்றும் நடந்து கொண்டுதானே உள்ளன. அவை குறித்தெல்லாம், பொதுமக்களின் சினம், தீயாக மூண்டு எழவில்லையே ஏன்? ஏனெனில், அவையெல்லாம், வருண - சாதித் ‘தருமங்களாக' இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அமர்த்தியா சென்னின் நூல், வர்க்க அடிப்படையிலும் இன்னொரு வினாவை முன் வைக்கின்றது.

"2002 ஜுலை 30 - 31 ஆம் நாள்களில் நாட்டில் மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டு. ஏறத்தாழ 600 மில்லியன் மக்கள், அந்த நாள்களில், மின்சாரம் இன்றித் தவித்தனர். அப்போது நாடே கொந்தளித்தது. அந்தக் கோபத்தில் நியாயம் உள்ளது. ஆனால் அவர்களுள் 200 மில்லியன் மக்கள், நிரந்தரமாகவே, மின்சார இணைப்பு இல்லாமல், காலகாலமாக வாழ்ந்து வருகின்றனரே, அவர்களைப் பற்றி இங்கு ஒன்றுமே பேசப்படுவதில்லையே, ஏன்?"

முதலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி, வருணம் சார்ந்தது என்றால், இரண்டாவதாக உள்ள செய்தி, வர்க்கம் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், பல நேரங்களில், வருணமும், வர்க்கமும் பின்னிக்கிடக்கின்றன என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. வரலாற்றாசிரியர் டாயன்பீ கூறுவதுபோல, "உருவத்தில் சாதியாகவும், உள்ளடக்கத்தில் வர்க்கமாகவும்" (‘caste in form and class in content') இந்திய சமூக அமைப்பு உள்ளது.

எனவே, ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளன. பொருளாதார வளர்ச்சியும், சமூக முன்னேற்றமும் (economic growth and social progress)என அவற்றைக் குறிப்பிடலாம். சமூக முன்னேற்றம் என்பது முழுக்க முழுக்க சமூக நீதியை (social justice) அடிப்படையாகக் கொண்டது.

சமூக நீதிக் கோட்பாடு என்பதை, வெறுமனே இடஒதுக்கீடு (Reservation) என்று குறுக்கிப் பார்க்கும் போக்கு இங்கு உள்ளது. சமூக நீதி என்பது, வர்க்கம், சாதி, பால் முதலான பல்வேறு அடிப்படைகளில், மக்கள் ஒடுக்கப்படும் அநீதிக்கு எதிரானது, சமத்துவத்தைத் தன் உள்ளடக்கமாகக் கொண்டது.

ஆனால், இவை குறித்தெல்லாம் நம் பாடப்புத்தகங்களும், பாடத்திட்டங்களும் வாய் திறப்பதில்லை. சமூகநீதி தொடர்பான நீண்ட வரலாறு, தமிழகத்திற்கு உண்டு. ஆனால் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், தமிழ்நாட்டுக் கல்வி அதனை எடுத்துரைப்பதே இல்லை.

இளைஞர்களும், பாடத்திட்டத்திற்கு வெளியே நூல்களைத் தேடிப் படிப்பதில்லை. படிப்பு முடிந்து, பணிகளுக்குச் சென்ற பின்னும், சமூக வரலாற்று நூல்களிலிருந்து விலகியும், அந்நியப்பட்டுமே நிற்கின்றனர். நாளேடுகள் தொடங்கி, கனமான நூல்கள் வரை, படிக்கும் பழக்கம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.
"எங்க சார் படிக்க நேரமிருக்கு. காலையில் வேலக்கிப் போனா, ராத்திரிதான் திரும்பி வரோம். ‘நெட்'டுல கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறோம். சனி, ஞாயிறு ரிலாக்ஸ் பண்ணவே சரியா இருக்கு" என்ற வெளிப்படையாகக் கூறும் இளைஞர்களும் உள்ளனர்.

Post-#1111/7/2014, 6:12 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


அவர்கள் கூறும் அந்த நேரமின்மையைக் கருத்தில் கொண்டே, எட்டு மணி நேரம் மட்டும் வேலை என்கின்றோம். அதற்கும் கூட நம் இளைஞர்கள் சிலர் சினம் கொள்கின்றனர். இக்கட்டுரையின் முன்பகுதியில் குறித்துள்ளபடி, மருத்துவர்கள் உள்பட, உலகில் உள்ள அனைவருக்கும் எட்டுமணி நேர வேலையை வலியுறுத்துவீர்களா என்று கேட்கின்றனர்.

கண்டிப்பாக...யாராக இருந்தால் என்ன? எல்லோருக்கும் விதி பொதுவாகத்தானே இருக்க வேண்டும். விதிவிலக்காகச் சில நாள்களில், சில வேளைகளில் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி வரலாம். அதில் பிழையில்லை. ஆனால் அந்த விதிவிலக்கே, விதியாக ஆகிவிடக் கூடாது.

உழைக்கவும், உறங்கவுமான நேரம் போக, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது ஓய்வு இருந்தால்தான்-, படிக்கவும், சிந்திக்கவும், பழகவும், உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். அப்போதுதான் மனித வாழ்க்கை பொருளுடையதாக ஆகும். மெதுவாக நம்மை இறுக்கிக் கொண்டிருக்கும் இயந்திரத் தன்மையிலிருந்து விடுபட்டு, மனிதத் தன்மையை நாம் தழுவிக் கொள்ள முடியும்.

கற்பது, பட்டம் பெறுவது, வேலையில் அமர்வது, பொருள் ஈட்டுவது, பொருளாதார நிலையை உறுதிப்படுத்திக் கொள்வது போன்றவையெல்லாம், வாழ்வின் ஒரு பகுதி என்றால், பொது அறிவை நோக்கிப் படிப்பது, நண்பர்களைச் சந்திப்பது, விளையாடுவது, இசையில், இலக்கியத்தில் தோய்வது, பிறருக்கு உதவுவது போன்றவைகள் இன்னொரு பகுதி இல்லையா!

இரண்டில் ஒன்று போதும் என்று எவரும் முடிவெடுக்க முடியாது. இரண்டும் தேவை. முதல் பகுதியை நோக்கி எவரையும் நாம் தள்ள வேண்டியதில்லை. இயல்பாகவே எல்லோரும் அதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இரண்டாவது பகுதியும் வாழ்வில் இன்றியமையாதது என்பதைச் சிறிது சிறிதாக இன்றைய உலகமும், இளைஞர்களும் மறந்து கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் மீண்டும் அதனை நினைவுபடுத்துவதற்காகவே, இப்போது இதுபோன்ற தொடர்கள் தேவையாக உள்ளன.

(வியாழன்தோறும் சந்திப்போம்)

தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com , www.subavee.com)

Post-#1211/7/2014, 6:12 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


ஒரு நாட்டின் மேம்பாடு, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத்திலும் பிணைந்து கிடக்கின்றது என்று கண்டோம்.

சமூக முன்னேற்றம் குறித்து மட்டுமே இத்தொடர் பேசுகிறது.

ஒரு சமூகத்திற்கும், நாட்டிற்கும் இடையிலான வேறுபாடு நாம் அறிந்ததே. உலகில் உள்ள எந்த ஒரு சமூகமும், ஓர் அரசினால் (State)ஆளப்படுகின்றது. அவ்வாறு ஆட்சிக்கு உட்படும்போதே, சமூகம் என்பதனை நாடு (Nation) என்று அழைக்கின்றோம்.

ஒரு நாட்டில் ஒரே ஒரு சமூகமும் இருக்கலாம். பல்வகைச் சமூகங்களும் இருக்கலாம். (இப்போதெல்லாம் சமூகம் என்பதைச் சாதிக்கான மாற்றுச் சொல்லாக ஆள்கின்றனர். நாம் இங்கே தேசிய இனத்தையே சமூகம் என்று குறிக்கின்றோம்).

ஒரு நாட்டில் ஒரே ஒரு சமூகம் மிகப்பெரும்பான்மையாக இருக்குமானால், அதனைத் தேசிய அரசு (Nation State) என்றும், பல்வகைச் சமூகங்கள் இருக்குமானால், பல்தேசிய அரசு (Multinational State) என்றும் அரசறிவியல் (Political Science) கூறுகின்றது. எந்த ஐயத்திற்கும் இடமின்றி, இந்தியா ஒரு பல்தேசிய அரசு. சரியான வரையறையின்படி, இந்தியா ஒரு துணைக்கண்டம்.

எனவே, இங்கு ‘ஒரே நாடு, ஒரே பண்பாடு' என்னும் முழக்கம் ஏற்புடையதாகாது. பல்வேறு பண்பாடுகளைப் பெற்றிருக்கும் பல்தேசிய அரசே இந்தியா என்பதால், ஒவ்வொரு சமூகம் குறித்தும் தனித்தனியாகத்தான் நம் ஆய்வினைக் கொண்டு செல்ல முடியும். இங்கு தமிழ்ச் சமூகத்தின் மீது மட்டுமே நம் பார்வை படர்கிறது.

Post-#1311/7/2014, 6:14 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


ஒரு சமூகம் முன்னேறிய சமூகம் என்று கொள்வதற்கு, இரண்டு நிலைகளை அச்சமூகம் எட்டியிருக்க வேண்டும்.

(1) அறிவார்ந்த சமூகம்
(2) பண்பார்ந்த சமூகம்

ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சி, அதனுடைய படிப்பு, சிந்தனை, நுண்ணறிவு, பட்டறிவு (அனுபவம்) ஆகிய நான்கு தளங்களில் இயங்குகின்றது. ஆதலால், அறிவு வளர்ச்சியின் முதல்படி படிப்பு & அதாவது கல்வியே என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கல்விக் கூடங்களின் மூலம் நாம் பெறும் முறைசார் கல்வி, கல்வி நிலையங்களுக்கு வெளியே நூலகம், ஊடகம் முதலானவற்றின் மூலம் நாம் பெறக்கூடிய பொதுக்கல்வி என இருவகைகளில் கல்வியறிவை நாம் பெறுகின்றோம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை, முறைசார் கல்வி கூட நமக்கு முறையாகக் கிடைக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் நம்முடையது.

பல்லவர் காலத்தில் தொடங்கி, சோழர்கள் காலத்தில் பெருவளர்ச்சி கண்டு, நாயக்கர்கள் காலத்தில் கொடிகட்டிப் பறந்த கல்வி முறை, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கல்வி உரிமையை வழங்கியது.

1835ஆம் ஆண்டு, வெள்ளையர்கள் கொண்டுவந்த பொதுக் கல்வித் திட்டமே அனைவருக்குமான கல்வி என்னும் நிலைக்கு அடித்தளமிட்டது. இதனைத்தான் மெக்காலே கொண்டுவந்த கல்வி என்று இப்போதும் கூறுகிறோம். மெக்காலேயை மிகக் கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் உண்டு. நம்மை எல்லாம் அறிவாளிகள் ஆக்குவதற்காக அவர் கல்விக் கதவுகளைத் திறக்கவில்லை, குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காகவே அவ்வாறு செய்தார் என்பது ஒரு பார்வை. அப்படியே வைத்துக் கொண்டாலும், கல்வி அற்று அடிமைகளாக இருந்த சமூகத்தை, குறைந்தபட்சம் குமாஸ்தாக்களாகவாவது ஆக்க முயன்றது ஒரு வகையில் முன்னேற்றம்தானே!

அந்தச் சூழலிலும் கூட, சமூகத்தின் மேல்தட்டில் இருந்தவர்கள்தான் அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட (1911) மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பார்ப்பனர் அல்லாத மக்களில் நான்கு சதவீதத்திற்கும் குறைவானவர்களே கல்வி அறிவு பெற்றிருந்தனர்.

1901ஆம் ஆண்டு, இந்தியா முழுமைக்கும் ஐந்து பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இந்தியா என்றால், இன்றைய இந்தியாவை நாம் கணக்கில் கொள்ளக் கூடாது. இன்றைய பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், பர்மா, நேபாளம், இலங்கை உட்பட அனைத்தையும் உள்ளடக்கியதே அன்றைய இந்தியா. அவ்வளவு பெரிய நிலப்பரப்புக்கு ஐந்து பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.

Post-#1411/7/2014, 6:15 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


மெக்காலேயைப் போலவே, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும் இன்னொரு ஆங்கிலேய ஆளுநர் கர்சான் பிரபு. இவர்தான் வங்காளத்தைத் துண்டாடியவர். ஆதலால் அவரை நம் வரலாற்றுப் புத்தகங்கள் கண்டித்துப் பேசும். ஆனால், அதே கர்சான்தான், இந்தியாவில் கல்வி பரவலாவதற்குப் பெரிய காரணமாக இருந்தார் என்பதை நாம் அழுத்திச் சொல்வதில்லை. 1902ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள கல்வி அதிகாரிகள் அனைவரையும் அழைத்து சிம்லாவில் ஒரு மாநாடு கூட்டியவர் கர்சான். அந்த மாநாட்டில்தான், நாடு முழுவதும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என்னும் தீர்மானம் நிறைவேறிற்று.

இந்த இடத்தில் இன்னொரு நுட்பமான செய்தியையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. யாரெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனரோ, அவர்கள் எல்லோரும் இன்னொரு விதத்தில், கல்வியின் அடிப்படையில் நமக்கு உதவியவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் மீது பார்ப்பனர்கள் கோபம் கொள்வதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மகாத்மா ஜோதிராவ் புலே, ‘அடிமைத்தனம்' என்னும் தன் நூலில் எழுதியிருப்பதை இங்கே எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. "இந்தியாவின் மேல்சாதியினர் ஆங்கிலேயர் மீது கோபம் கொண்டதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அவர்கள் நமக்குப் பொன்னையோ, பொருளையோ தந்திருந்தால் கூட, இங்கே உள்ளவர்கள் அவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் கூறி ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்குக் கல்வியை அல்லவா அவர்கள் கொடுத்துவிட்டார்கள்!" என்பார் புலே.

அரசுத்தடை நீக்கப்பட்டபின்பும், காலகாலமாக இருந்துவந்த நம்முடைய மனத்தடையை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் பல ஆண்டுகள் ஆயின. 1920களுக்குப் பிறகுதான், வசதியான குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் படிக்கத் தொடங்கினர். நடுத்தட்டுப் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு மேலும் இரு பத்தாண்டுகள் ஆயின. 1950க்குப் பின்பே பெண் கல்வி தொடங்கிற்று. இவ்வாறாகப் படிப்படியாகத்தான் கல்வி வளர்ச்சியை நாம் கண்டோம்.

அதிலும் ஒரு பெரும் வேறுபாடு இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரே நிலையில் நம் நாட்டில் கல்வி வளர்ச்சி அமையவில்லை. நாம் மணலில் ‘அரி, ஓம்' என்று எழுதப்பழகியபோது, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள், சிலேட்டுக் குச்சிக்கு வந்துவிட்டார்கள். நாம் சிலேட்டுப் பலகையைத் தொட்டபோது, அவர்கள் கைகளில் பென்சில் இருந்தது. பென்சிலை நாம் எட்டிப் பிடித்தபோது, அவர்கள் பேனாவிற்குத் தாவிவிட்டார்கள். பேனா நம் வசப்பட்ட நேரத்தில், அவர்கள் தட்டச்சு இயந்திரத்தில் கைபழகிக் கொண்டிருந்தார்கள். நம்மில் பலர் தட்டச்சர்களானோம், ஆனால் அவர்களுக்கோ அப்போது கணிப்பொறி கிடைத்துவிட்டது. கணிப்பொறியைக் கண்டு நாம் மலைத்துத் திகைத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் அவர்கள் நம்மைவிட்டு, வெளிநாடுகளுக்கே சென்று விட்டார்கள். இப்போதுதான் வெளிநாட்டு விமானங்கள் நம் பிள்ளைகளையும் ஏற்றிச் செல்கின்றன.

Post-#1511/7/2014, 6:16 pm

Admin

Admin
JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


இன்றைக்கும் கூட, பூரண ஞானம் பொலிந்துவிடவில்லை என்றாலும், கல்வி கற்றோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவை அடைந்துள்ளது. ஆணோ, பெண்ணோ, கல்வி என்பது அடிப்படைத் தேவை என்னும் புரிதல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. 14 வயது வரையில், அனைவருக்குமான கட்டாயக் கல்வி என்னும் சட்டம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றாலும், சமூகம் அத்தேவையைப் புரிந்து ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் விளைவாகத் தமிழ்நாட்டில் முறைசார் கல்வி இன்றைக்குப் பெரும்பான்மையானவர்களுக்குக் கிடைத்துள்ளது-.

என்றைக்குமே எந்த ஒரு நல்ல செயலுக்கும் கூட, வேறுவிதமான பக்க விளைவுகள் இருந்தே தீரும். கல்வி தொடர்பாகவும் அப்படி ஒரு பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.

முறைசார் கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றுதான். ஆனால் அந்தக் கல்வியே வாழ்வில் எல்லாம் என்று கருதிவிடக் கூடாது. அது வாழ்வின் ஒரு பகுதிதான். பிற வழிகளிலும்கூட கல்வியையும், அறிவையும் நம்மால் பெற முடியும் என்னும் நம்பிக்கையை முற்றுமாக இழந்து, சமூகம் இந்தக் கல்வி முறையின் மீது அளவிலாக் காதல் கொண்டது. அதன் விளைவாகத் தேர்வில் தோல்வி காணும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கே சென்றனர், செல்கின்றனர். மதிப்பெண்களை நோக்கி மாணவர்களை விரட்டும் நிலைமை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. சிறந்த மதிப்பெண் ஒன்றே பிறவிப் பயன் என்பதான எண்ணம் உருவாகியுள்ளது. 10ஆம் வகுப்புப் பாடத்தைச் சில பள்ளிகள் 9ஆம் வகுப்பிலேயே தொடங்கிவிடுகின்றன. படிப்படியாக அறிவு பெறுதல் என்னும் நிலையைத் தவிர்த்துத் தாவிப் பிடிக்கும் ஆர்வம் மேலிடுகிறது.

பார்வை இல்லாதவன் ஒளிபெற்ற பிறகு அடையும் மகிழ்ச்சியினைப் போல, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி பெறத் தொடங்கிய சமூகம், மற்ற எல்லாவற்றிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, கல்வி ஒன்றே போதும் என்னும் முடிவுக்கு வந்துள்ளது. வீடுகளில் தொலைக்காட்சிகள் நிறுத்தப்படுகின்றன. படிப்பைத் தவிர மற்ற அனைத்துச் சிந்தனைகளுக்கும் இரண்டாம் இடமே கொடுக்கப்படுகிறது. கவிதை, ஓவியம், இசை போன்றனவெல்லாம் வாழ்விற்கு உதவாதவை, பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படும், கல்வி ஒன்றே காலத்திற்கும் நமக்குக் கைகொடுக்கும் என்பன போன்ற எண்ணங்கள் தலைதூக்கி நிற்கின்றன. இதுபோன்ற பக்க விளைவினைச் சரி செய்து கொள்ளவேண்டும் என்று கூறுவது, கல்வியைக் கைவிட்டுவிட வேண்டும் என்னும் நோக்கில் அன்று. கல்வியும் வேண்டும், கல்விக்கு அப்பாலும் வேண்டும் என்ற சிந்தனையே இங்கு முன்வைக்கப்படுகிறது.

கல்விக்கு அப்பால் கதைகளை, காப்பியங்களை, கலைகளைத் தேடிய காலம் இங்கே இருந்தது. ஆனால் 1980களுக்குப் பிறகு அதில் ஒரு சரிவை நம்மால் பார்க்க முடிகிறது. அதற்கு என்ன காரணம்?

ஒரு பெரிய காரணம் 1976ஆம் ஆண்டில் தொடங்கிற்று..

(வியாழன்தோறும் சந்திப்போம்)

Post-#16


JOIN TODAY

அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன் Empty Re: அறிந்தும் அறியாமலும்...! - சுப. வீரபாண்டியன்


View previous topic View next topic Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum