கல்விச் சுற்றுலாவாக இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்ற ஹைதராபாத் பொறியியல் மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கினர். இதில் 24 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டனர்.
நீரில் மூழ்கிவர்களின் உடலைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே மீட்கப்பட்ட 4 மாணவர்களின் உடல்கள் விமானம் மூலமாக சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 48 மாணவ, மாணவிகள் தங்கள் ஆசிரியர்களுடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
கடந்த 8 ஆம் தேதி மணாலிக்கு அருகில் உள்ள பியாஸ் ஆற்றில் இறங்கி மாணவர்கள் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 24 மாணவ, மாணவிகள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஆற்றில் மூழ்கிய 3 மாணவிகள், 2 மாணவனை நேற்று முன்தினம் சடலமாக மீட்டனர்.
மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், உயிர் தப்பிய 24 மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் மாலை சிறப்பு விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதே போல, மற்றொரு ராணுவ சிறப்பு விமானத்தில் மாணவிகள் விஜிதா, லட்சுமி காயத்ரி, ஐஸ்வர்யா, மாணவன் ராம் பாபு ஆகியோரின் சடலங்கள் அவர்களது சொந்த ஊரான ஹதராபாத்துக்கு அனுப்பப்பட்டது.
சுற்றுலா சென்ற பிள்ளைகள், சடலமாக திரும்பியதை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறியது நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.